விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் .!

கிருஷ்ணகிரி

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் .!

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் வழங்கியவரின் உடலுக்கு  கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 01.09.2025-ல்  அரசு மரியாதையுடன் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், சுக்கிரண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் 24 வயது  இவர் கடந்த 28 ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலை விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மீண்டும் 30.08.2025-ம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள்  பரிசோதனை செய்ததில் அந்த வாலிபருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது என கண்டறிந்தனர். 

இதனைத் தொடர்ந்து நவீன்குமாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மூளை சாவு பற்றியும் உடல் உறுப்பு தானம் பற்றியும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சத்தியபாமா மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அப்போது அவர்கள் நவீன்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க தாமாகவே அவரது தாயார் மற்றும் உறவினர்கள் முன் வந்தனர். 

இதனை அடுத்து  நவீன்குமாரின் இரண்டு  சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு, ஒன்று கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கும், மற்றொன்று ஓசூர் காவேரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது. நுரையீரல்- MGM ஹெல்த் கேர் சென்னை மருத்துவமனைக்கும், கல்லீரல்- ஓசூர் காவேரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.

உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நவீன்குமாரின் உடலுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்  மரு.சத்தியபாமா, மருத்துவமனை  கண்காணிப்பாளர் மரு. சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. செல்வராஜ், மயக்கவியல் துறை பேராசிரியர் மரு. சங்கீதா, மருத்துவர்கள் ராஜா, மகேஸ்வரன், பிரவீன், கார்த்திக் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், மற்றும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கிரிஸ்டல் பணியாளர்கள் ஆகியோர் அரசு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. சத்தியபாமா நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உடலை ஒப்படைத்தார்.
 
இது குறித்து கல்லூரி முதல்வர் மருத்துவர் சத்யபாமா கூறுகையில்......
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நவீன்குமார் என்ற வாலிபர் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து, பரிசோதனை செய்ததில் அவர் மூளைச்சாவடைந்தது தெரியவந்தது. 

இதனைப்பற்றி அவரது தாயார் பொன்மணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மூளைச்சாவு பற்றியும், உடலுறுப்பு தானம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மூளைச்சாவு அடைந்த நவீன்குமார் உடல் உறுப்புகளை தானமாக வழங்க தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டனர். இதனை ஏற்று அவருடைய உடல் உறுப்புகள் சிறுநீரகம் கல்லீரல் நுரையீரல் ஆகிய உறுப்புகள் பெரப்பட்டு சென்னை, கோவை, ஓசூர் மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்புகள் அனுப்பப்பட்டன. 

மறைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கிய அவரது தாயார் பொன்மணி மற்றும் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பாகவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாகவும் நன்றியையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் கூறினார்.

செய்தியாளர்

மாருதி மனோ