படி படி எனக் கூறிய தாயை கழுத்தை நெறித்து கொன்ற 14 வயது மகன் .!

கள்ளக்குறிச்சி

படி படி எனக் கூறிய தாயை கழுத்தை நெறித்து கொன்ற 14 வயது மகன் .!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் பெண்ணுக்கு திருமணமாகி 17 வயதில் ஒரு மகளும் 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். அந்தப் பெண்ணின் மகன் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த தீபாவளி அன்று அந்தப் பெண் தான் வளர்த்து வரும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு வயலில் கழுத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் அவர் உயிரிழந்து கிடந்தார். இதனை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகன் பெற்ற தாய் என்றும் பார்க்காமல் தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் மாணவன் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு படிப்பில் பெரிய அளவில் நாட்டம் கிடையாது. ஆனாலும் தினமும் பள்ளிக்கூடத்திற்கு சென்று விடுவேன். வீட்டுக்கு வந்த பிறகு படிக்க மாட்டேன், என் நண்பர்களுடன் விளையாடுவது ஊர் சுற்றுவது என இருப்பேன். இது என்னுடைய தாய்க்கு பிடிக்கவில்லை. அவர் என்னை தொடர்ந்து கண்டித்து வந்ததால் அவர் மீது எனக்கு வெறுப்பு வந்தது. தீபாவளி அன்று மதியமும் ஏன் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்ற என் தாய் என்னை கண்டித்தார். எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் அவர் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்ற போது நானும் பின்தொடர்ந்து சென்றேன்.

அங்கு வைத்து என் தாயிடம் ஏன் என்னை அடிக்கடி திட்டிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு என் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் என் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்தேன். பிறகு எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்து விட்டேன் என்று மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனைத் தொடர்ந்து மாணவனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.