கழிவறையில் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவு அதிகாரி, வீடியோ வெளியானதால் நடவடிக்கை .!
புதுச்சேர் சார்பதிவாளர்

புதுச்சேரி: புதுச்சேரியில் பத்திரபதிவுத்துறை அதிகாரி ஒருவர் கழிவறையில் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில், பத்திரப் பதிவு செய்ய பணம் கேட்பதும், லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறாது என்பதும் தொடர் புகார்களாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக, போலி பத்திரம், உயில்கள் மூலம் கோயில் நிலங்கள், அரசு இடங்கள், தனியார் சொத்துக்களை அபகரிப்பது அதிகரித்து வருவதாகவும், இதற்கு பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவின. இந்த முறைகேடுகளுக்காக அவர்களுக்கு பல கோடிகள் லஞ்சமாக கைமாறுவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், புதுச்சேரியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் என்பவர், ஒரு பத்திரப் பதிவுக்காக பணம் கேட்டுள்ளார். பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம், அவர் கழிவறையில் வைத்து லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் வெளிச்சத்திற்கு வந்தது.
வீடியோவில், ஒரு நபர் கழிவறைக்குள் சென்று, சார் பதிவாளர் ஸ்ரீகாந்த்திடம் பணத்தை கொடுப்பதும், அதை அவர் வாங்குவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, புதுச்சேரி அரசு மற்றும் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மத்தியில் எழுந்த கண்டனங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் எதிரொலியாக, அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் இதுபோன்ற புகார்கள் மீது தீவிர விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மேலும், பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், லஞ்சமற்ற சேவையை உறுதிப்படுத்தவும் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.