தமிழ்நாட்டில் மின்சார (E V) வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு அறிவிப்பு. !

சென்னை

தமிழ்நாட்டில் மின்சார (E V) வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு அறிவிப்பு. !

சென்னை: மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அனைத்து வகை பேட்டரி வாகனங்களுக்கும் (மின்சார வாகனங்கள்) வழங்கப்படும் 100 சதவீத வரி விலக்கை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

ஜனவரி 1, 2026 முதல் டிசம்பர் 31, 2027 வரை, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத அனைத்து மின்சார வாகனங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். இது மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் பிற தொழில் பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட ஓர் அரசு ஆணையில் இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மின்சார வாகனப் பயன்பாடு அதிகரித்து, 2025-இல் சுமார் 7.8 சதவீதத்தை எட்டும் என வாகன உற்பத்தியாளர்கள் அரசுக்கு எடுத்துரைத்தனர். இது தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்பதால், அனைத்து மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி விலக்கை மேலும் நீட்டிக்க அவர்கள் கோரிக்கை விடுத்ததாக அந்த ஆணை தெளிவுபடுத்துகிறது.

மின்சார வாகனங்களுக்கான சலுகை

2023 தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கைக்கு இணங்க, இந்த 100% வரி விலக்கை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க போக்குவரத்து ஆணையரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தியாவின் பிற மாநிலங்களின் நடைமுறைகளுக்கு ஏற்ப, மின்சார வாகனங்களுக்கு வரி விதிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த விரிவான ஆய்வைச் சமர்ப்பிக்குமாறும் போக்குவரத்து ஆணையருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

வரி விலக்குகளும் சலுகைகளும் மின்சார வாகனப் பரவலாக்கத்திற்கு கணிசமாக உதவியுள்ளதாகத் தொழில் வல்லுநர்கள் குறிப்பிட்டனர். மாநிலத்தின் மின்சார வாகனச் சூழல் அமைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இந்த நீட்டிப்பு மிக முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 2019 தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையின் கீழ் சாலை வரி விலக்கு முதலில் வழங்கப்பட்டது. இது 2022 வரை அமலில் இருந்து, பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

"இந்த முடிவு மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களை மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்வதுடன், தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்திற்கான தமிழகத்தின் உறுதிப்பாட்டையும் வலுவாகப் பறைசாற்றுகிறது," என்று ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறப்பான முடிவு

இதேபோல் சென்னை, வியாசர்பாடியில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகத்தின் (MTC) டிப்போவில், குறைந்த தளம்கொண்ட MTC மின்சார பேருந்துகளுக்கான 240kv டயரெக்ஸ் சார்ஜர்களை கொண்ட மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு பொது இடங்களை அடையாளம் கண்டுள்ளது. நகர மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை பார்க்கிங், பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா, அண்ணா நகர் போகன்வில்லா பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, தி.நகர் மாநகராட்சி விளையாட்டு மைதான பார்க்கிங், தி.நகர் சோமசுந்தரம் பூங்கா, அம்பத்தூர் மங்கல் ஏரி பூங்கா மற்றும் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங் போன்ற முக்கிய பொது இடங்களில், அரசு நிலங்களில் இந்த மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

ரிலக்ஸ் எலக்ட்ரிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் லிமிடெட் (TNGECL) உடன் இணைந்து இந்த நிலையங்களை அமைக்கிறது. இவை இந்த ஆண்டு டிசம்பருக்குள் செயல்படத் தொடங்கும்.

சென்னை இ சார்ஜிங்

ஒவ்வொரு நிலையமும் சுமார் 500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும். ஒரே நேரத்தில் இரண்டு கார்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதியுடன், நான்கு சக்கர வாகனங்களுக்கு விரைவு சார்ஜிங் வசதிகளும் இதில் இருக்கும்.

மாநிலம் முழுவதும் 500 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க TNGECL மற்றும் ரிலக்ஸ் எலக்ட்ரிக் இடையேயான கூட்டணிக்கு இது வழிவகுக்கிறது. இந்த ஒன்பது நிலையங்கள் தமிழ்நாட்டின் தூய்மையான போக்குவரத்து முயற்சி திட்டத்தின் முதல் கட்டமாக செயல்படும். எளிதில் அணுகக்கூடிய பொது இடங்களில் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால், குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களை வசதியாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.