தமிழகத்தின் முதல் அர்ச்சுனர் தவக்கோல நடுகல் கண்டுபிடிப்பு:.!
கிருஷ்ணகிரி

தமிழகத்தின் முதல் அர்ச்சுனர் தவக்கோல நடுகல் கண்டுபிடிப்பு:
16/8/25 சனிக்கிழமை தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.
அப்போது கொண்டப்பநாயன்பட்டியை சேர்ந்த, ரவி, ரவிச்சந்திரன் மற்றும் அதே ஊரை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கிஷோர் மற்றும் தேவா ஆகியோர் நரியனேரி அழைத்து சென்று நடுகல் ஒன்றினைக் காட்டினர். இதனை ஆய்வு செய்ததில் இது இதுவரை தமிழகத்தில் கிடைத்துள்ள நடுகற்களில் காணப்படாத புது வகை எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலரும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆலோசகருமான தொல்லியல் அறிஞர் கோவிந்தராஜ் அவர்கள் கூறியதாவது:
இந்த நடுகல் சிற்பம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட கலை அமைதியில் வடிக்கப்பட்டுள்ளது. உயரமான ஒரு கம்பத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள பலகையின்மீது ஒருவன் இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அமர்ந்திருப்பது போல் காட்டப்பட்டிருக்கிறான்.
இவன் தலைக்கு மேல் ஒரு குடைக் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு பெண் நின்றுக்கொண்டு இவனுக்கு விளக்கு( விளக்கேற்றி வழிபாடு செய்வது போல் காட்டுவதுபோல் உள்ளது. இச்சிற்பம் அர்ச்சுனன் தவக்கோல சிற்பமாகும். ஒரு அர்ச்சுனன் வேடம் தரித்து நடிக்கும் தெருக்கூத்துக் கலைஞன் இறந்ததின் நினைவாக அவ்வூர் மக்கள் கூடி இந்த நடுகல்லினை எடுத்திருக்கிறார்கள். கலைஞனின் முகத்தில் மீசை, அவன் அணிந்திருக்கும் மகுடம், இடை ஆடை ஆகியவை இவன் அர்ச்சுனன் வேடம் தரித்திருப்பதையும், அவன் தபசு மரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் பலகையில் இரண்டு கால்களையும் தொங்கவிட்டு வலதுகையை தலைக்குமேல் தூக்கியவாறும் இடது கையை நெஞ்சில் வைத்திருப்பதுபோலவும் காட்டப்பட்டிருப்பது அவன் தவக்கோலத்தில் இருப்பதைக் காட்டுவதாகும்.
விளக்கை ஏந்தியிருக்கும் பெண் அவனது மனைவியாகும். அர்ச்சுனன் தவ நிகழ்ச்சியின்போது மேலிருந்து கீழே கூடியிருக்கும் பெண்களை நோக்கி அர்ச்சுனன் மலர்களை தூவுவார். அம்மலர்களை தனது முந்தானையில் பெண்கள் பிடிப்பர். இது அவர்களுக்கு வேண்டிய குழந்தைப் பேறு உள்ளிட்டவற்றை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அர்ச்சுனன் தவம் இருந்து சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்றார் என்பது மகாபாரதத்தில் வரும் காட்சியாகும்.
மாமல்லபுரம் அர்ச்சுனன் தவக்கோல சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும். பின்னால் வந்த காலங்களிலும் அர்ச்சுனன் சிற்பங்கள் தூண்களில் காட்டப்பட்டுள்ளன. அர்ச்சுனன் தவத்தை முத்தாய்ப்பாகக் கொண்ட மகாபாரத தெருக்கூத்து வட தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இதற்கு முன்னர் இந்த நடுகல்லை ஆராய்ந்தவர்கள் இது ஒரு கழுவேற்ற நடுகல் எனக் கூறியிருந்தனர்.
ஆனால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே மகாபாரதத் தெருக்கூத்து நடந்திருப்பதையும் அதில் அர்ச்சுனன் வேடம் தரித்து தபசு மரத்தில் ஏறி தவசு செய்வதும் வழக்கமாய் இருந்துள்ளதை இந்நடுகல் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. இதே போன்ற ஆனால் அர்சுனனின் தெருக்கூத்து ஆடை அலங்காரம் மிகத்தெளிவாய் காட்டப்பட்டு இடது கையில் ஒரு கத்தியையும் வைத்துள்ள நடுகல் ஒன்று திருப்பத்தூர் வட்டம் மடவாளம் அடுத்த செலந்தம்பள்ளி விவசாய நிலத்தில் காணப்படுகிறது.
திருப்பத்தூரை அடுத்த சக்தி நகரில் உள்ள நடுகல் உருவம் அமரும் பலகைக்கு மேல் நீண்டிருக்கும் மரத்தில் அமர்ந்திருப்பதுபோல் காட்டப்பட்டிருப்பது அவன் தவத்தில் இருப்பதைக் குறிப்பதாகும். இவனது வலக்கை அபயத்திலும் இடது கை தொடைமீது வைத்தும் காணப்படுகிறது. இம்மூன்று நடுகல் சிற்பங்களும் அமைப்பில் ஒன்றுபோலவே உள்ளன.
சினிமா என்பது நாடகத்தின் நீட்சியாகும். சினிமாவில் கதாநாயகர்களைக் கொண்டாடும் பழக்கம் நம் நாட்டில் அண்மையில் ஏற்பட்டதல்ல. இப்பழக்கத்தின் தொடக்கத்தை படம்பிடித்துக் காட்டுவதாக இந்நடுகற்களைக் கூறலாம்.
தெருக்கூத்துகளில் அர்ச்சுனர் வேடம் தரித்து நடிப்பவரை தெய்வ சக்தி உடையவராகவே மக்கள் நம்பினர். அவர்கள் இறந்ததும் அவர்களுக்கு நினைவுக் கல் எடுத்தனர் என்பதின் அடையாளங்கள்தாம் திருப்பத்தூரை சுற்றியுள்ள இந்த 3 நடுகற்களும் உணர்த்துபவைகளாகும்.
கொம்பு ஊதும் இசைக்கலைஞனுக்கான நடுகல் ஒன்று கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்திலும் வீணை சகோதிரிகளின் நினைவாய் எடுக்கப்பட்ட நடுகல் ஒன்று பெண்ணேஸ்வரமடத்தில் இருப்பதையும் இங்கு நினைவுக் கொள்ளவேண்டும்.
இசைக் கலைஞர் மட்டுமல்லாது தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் நடுகல் எடுக்கும் பழக்கத்தைத் தான் திருப்பத்தூரைச் சுற்றியுள்ள நரியனேரி, சக்தி நகர் மற்றும் செலந்தம்பள்ளியில் எடுக்கப்பட்டிருக்கும் அர்ச்சுனர் தவக்கோல நடுகற்கள் தெரிவிக்கின்றன. இவ்வகை அர்ச்சுனர் தவக்கோல நடுகற்கள் தமிழக நடுகல் வரலாற்றில் புது வரவாகும். இப்பழக்கம் திருப்பத்தூரை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் காணப்படுவது இப்பகுதி மக்களின் தனிச்சிறப்புமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதலாம்.
இந்த ஆய்வில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், தினமனி ரவி , ஆசிரியர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர்
செய்தியாளர்
மாருதி மனோ