ஸ்ரீ பிரித்தியங்கரா திருக்கோவிலில் வரலட்சுமி விரத பௌர்ணமி சிறப்பு வழிபாடு .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஸ்ரீ பிரித்தியங்கரா திருக்கோவிலில் வரலட்சுமி விரத பௌர்ணமி சிறப்பு வழிபாடுகள். திருக்கோயில் கலசப்பாக்கம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்பு வழிபாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி மற்றும் வரலட்சுமி விரத தினத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
மோரணப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் பிரத்தியங்கிரா தேவி அம்மன், மகா கால பைரவர், ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது ஆகிய தேவதா மூல விக்கிரகங்கள் தனி தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கின்றனர்.
இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் போன்றவற்றை அகற்றும் விதமாகவும், உலகில் அமைதி நிலவி விவசாயம் செழித்து பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி, மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
மேலும் இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் ஸ்ரீ வரமகாலட்சுமி விரதமும் ஒருங்கே ஒரே நாளில் கொண்டாடப்படுவதால் ஏராளமான பெண்கள் அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். அந்த வகையில், இன்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அதிமுக கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரமாகிய வி பன்னீர்செல்வம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
முன்னதாக திருக்கோயிலில் ஸ்தாபகர் ஏழுமலை சுவாமிகள் திருவுருவச் சிலை முன்பு அவரது பாதங்களை பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன் பின்னர் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரங்களில் அம்மன் அருள் பாலித்தார். அதே போல ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது, ஸ்ரீ மகா காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரவு நடைபெற்ற யாக சாலையில் மிளகாய் வத்தல் யாகத்தில் குடும்பம் குடும்பமாக ஏராளமானவர்கள் பங்கேற்று வழிபட்டது பரவசத்தை ஏற்படுத்தியது. பின்னர் அம்மனுக்கு மங்கள ஆரத்தி காட்டி பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதில், தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு மா விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ