மாற்றுத் திறனாளி மாணவியின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர். .!
தென்காசி

மேலகரம் மாற்றுத் திறனாளி மாணவியின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அரசு
அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர்.
நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மாணவி
தென்காசி மே 02
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான இன்று அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு 2025 – 26 ஆம் ஆண்டுக்கான புத்தகங்கள், சீருடை உள்ளிட்டவை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில்,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சி முடிந்ததும் மாவட்ட ஆட்சியரை சந்தித்த மேலகரம் இதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்தவரும், பள்ளியில் 4 ஆம் இடம்பெற்ற மாற்றுத் திறனாளி மாணவியுமான கிருஷ்ணப்ரியா தனக்கு வீல் சேர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.
இதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட ஆட்சியர் ஏ.கே கமல் கிஷோர் தனது நேர்முக உதவியாளரிடம் அறிவுறுத்தி வீல் சேர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.
சிறு வயது முதலே மாணவி கிருஷ்ண ப்ரியா உடல்நல பாதிப்புகளால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் பள்ளிக்கு விடுப்பு ஏதும் எடுக்காமல் வருகை தந்து 12 ஆம் வகுப்பில் பள்ளியில் 4 ஆம் இடத்தை பிடித்து சாதித்துள்ளார். அடுத்ததாக அவர் இளங்கலை பொருளாதார படிப்பு படிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர்
AGzM கணேசன்