தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து வழக்கறிஞருக்கு 1 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம். !
உயர் நீதி மன்றம்

தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், பெ. அமுதா ஆகியோர் அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
இவர்கள் நியமனத்துக்கு எதிராக பாஜக ஆதரவு வழக்கறிஞர் சத்யகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், முறையாக அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல; இதற்கு எந்த சட்ட பலமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
அரசியல் சாசனத்துக்கு விரோதமானது
மேலும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளது. இது அரசியல் சாசனக் கொள்கைகளுக்கு விரோதமானது என்பதால், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் அபராதம்
இதுதெதாடர்பான வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு முதல் முறையாக தமிழகத்தில் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை. அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
மேலும் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது உயர்நீதி மன்றம்.