ஊழல் தடுப்புச்சட்டம் 1988 - பாகம் -4
Prevention of corruption act

அரசுப் பணியாளர் சொந்த செல்வாக்கைப் பயன்படுத்த கைக்கூலி பெறுதல் ( பிரிவு - 9 )
அரசுப் பணியாளர் எவரும் பிரிவு 7 - ல் குறிப்பிட்டுள்ள செயலைச் செய்ய அரசுப் பணியாளர் என்ற தன் சொந்த செல்வாக்கைப் பயன்படுத்த, தமக்கோ அல்லது வேறு எவருக்கோ, ஊழல் அல்லது சட்ட விரோதமான வகையில் வெகுமதியாகக் கைக்கூலி எதையாவது பெற்றுக் கொண்டால் அல்லது கேட்டுப்பெற முயற்சித்தால், அவருக்கு குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை தண்டணையும் அபராதமும் விதிக்கப்படும்.
சட்டவிரோத செயலுக்கு அரசுப் பணியாளர் உடந்தையாக இருந்தால் (பிரிவு - 10)
அரசுப் பணியாளராக இருப்பவர் ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அல்லது உடந்தையாக இருந்து அதற்காக கைக்கூலியும், அத்தகைய நடவடிக்கைகளுக்குச் சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கைக்கூலியும் பெற முயற்சித்தால், அவருக்கு குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
விலைமதிப்புள்ள பொருளைப் பெறுதல் ( பிரிவு 11 )
அரசுப் பணியாளர் எவரும், பிரிவு 7 - ல் குறிப்பிடப்பட்டுள்ள செயலைச் செய்யவோ அல்லது செல்வாக்கை பயன்படுத்தவோ, அதற்காக தமக்கோ, வேறு எவருக்கோ வெகுமதியாக விலை உயர்ந்த பொருள்களைப் பெற்றால் அல்லது கேட்டுப் பெற முயற்சித்தால், அவருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
பிரிவு 7 அல்லது 11 ல் வரையறை செய்யப்பட்ட குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் ( பிரிவு 12 )
பிரிவு 7 அல்லது 11 ல் வரையறை செய்யப்பட்ட குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசுப் பணியாளருக்கு, குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
குற்றச் செயல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருத்தல் பிரிவு ( 14 ஆ )
பிரிவு 8, 9 , 12 - ன்படி குற்றச் செயல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அரசுப் பணியாளருக்கு, 2 ஆண்டுகளுக்கு குறையாத 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
மு.ர. தொடரும்