கட்சி கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.!

கிருஷ்ணகிரி

கட்சி கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.!

பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கழக கொடி கம்பங்களை அகற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம், மூன்றாம்பட்டி ஊராட்சியைச்சார்ந்த கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த கழக கொடி கம்பத்தினை கிளை கழக செயலாளர் .A. ராமமூர்த்தி, M. சக்கரை, C. ஆறுமுகம், D.பெருமாள் P. பூபாலன் ஆகிய கழகத் தோழர்கள் கொடி கம்பத்தினை அகற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி மேற்கண்ட ஐந்து பேரும் காயமடைந்த நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் A. ராமமூர்த்தி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கழகத்தில் உள்ள அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை இழந்து வாடும் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது  குடும்பத்தாருக்கும், கழகத் தோழர்களுக்கும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் இந்த  தகவல் அறிந்ததும்  தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களுக்கும், துணை முதலமைச்சர்  அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த ஊத்தங்கரைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் படி  உத்தரவிட்டதன் பேரில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் அவர்கள் உடனடியாக சென்னையிலிருந்து அவசரமாக புறப்பட்டு  ஊத்தங்கரைக்கு வருகை தந்து, ராமமூர்த்தி அவர்களது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக 3.0 லட்சம் ரூபாய் நிதிஉதவியும், இன்று நடைபெறுகின்ற இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் கூறி அன்னாரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேரையும், மருத்துவமனை சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி நான்கு பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் மருத்துவச் செலவுக்கு நிதி உதவி மாவட்ட கழகம் சார்பில்  வழங்கினார்கள்.

இனிவரும் காலங்களில் கொடிக்கம்பம் அகற்றிடும்போது மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்  என சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்கள்.

செய்தியாளர்

மாருதி மனோ