நெருப்போடு விளையாடும் டிரம்ப்.! பயங்கரவாத அமெரிக்காவுக்கு பாடம் புகட்ட 3-ம் உலகப் போருக்கு தயார்.. வடகொரிய அதிபர் பகிரங்க எச்சரிக்கை.!
அமெரிக்கா Vs வட கொரியா
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்துள்ளதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "சர்வதேச பயங்கரவாதம்" என்று சாடியுள்ள அவர், 3-ஆம் உலகப்போரை எதிர்கொள்ளத் தயார் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இதற்கு ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் அரசு ஊடகம் வாயிலாக கிம் ஜாங் உன் இன்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: "அமெரிக்கா தனது ஏகாதிபத்திய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மையைப் பறித்துள்ளது. ஒரு நாட்டின் தலைவரையே கடத்துவது என்பது அப்பட்டமான காட்டுமிராண்டித்தனம். இதன் மூலம் உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டது."
"தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடமாகும். ஆனால், வடகொரியா அப்படிப்பட்டது அல்ல. எங்களது நட்பு நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும்போது நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்.
மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள வடகொரியா முழுமையாகத் தயாராக உள்ளது. எங்களது ஏவுகணைகள் சரியான இலக்குகளை நோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளன. டிரம்ப் இப்போது நெருப்போடு விளையாடுகிறார்; இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்," என கிம் ஜாங் உன் தனது அறிக்கையில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நெருங்கிய நண்பரான மதுரோவை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும் என வடகொரியா வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில் வெனிசுலாவில் போர் பதற்றம் நிலவுவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த வெளிப்படையான போர் மிரட்டலால் உலக நாடுகளிடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
