விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை மீண்டும் களமிறக்க நினைக்கும் பா ஜ க .! தட்டிக் கழிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி. !

பா.ஜ.க.

விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை மீண்டும் களமிறக்க நினைக்கும் பா ஜ க .! தட்டிக் கழிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி. !

சென்னை: சட்டசபைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட விஜயதரணியை நிற்க வைக்க அக்கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது.

ஆனால் விஜயதரணி விளவங்கோடு தொகுதியில் சூழல் சரியில்லை என்பதால், வாரிய அல்லது ஆணைய பதவிகளை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத சூழலில், அத்தனை கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இம்முறை பாஜக தரப்பில் கூடுதல் இடங்களில் வெல்ல வேண்டும் என்பதில் அமித்ஷா குறியாக இருக்கிறார். இதனால் செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த மாவட்டத்தில் மட்டும் நாகர்கோவில், பத்மநாதபுரம் மற்றும் விளவங்கோடு ஆகிய தொகுதிகள் குறி வைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருந்தாலும், பாஜகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இதனால் விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை மீண்டும் களமிறக்க பாஜக ஆலோசித்து வருகிறது. 2011 சட்டசபைத் தேர்தல் தொடங்கி 2021 சட்டசபைத் தேர்தல் வரை தொடர்ச்சியாக 3 முறை விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் விஜயதரணி. ஆனால் எம்பி சீட் கோரி நீண்ட நாட்களாக காங்கிரஸ் தலைமையை நாடி வந்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளாததால், திடீரென நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். இதையடுத்து விஜயதரணிக்கு எம்பி சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து தமிழக பாஜக நிர்வாகிகளின் பட்டியலில் கூட விஜயதரணி பெயர் இடம்பெறவில்லை.

நயினார் நாகேந்திரனின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தாலும், விஜயதரணிக்கு பாஜக தலைமை எந்த பொறுப்பையும் அளிக்கவில்லை. இதனால் விஜயதரணி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று பாஜக தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் விஜயதரணி மீண்டும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அதேபோல் விளவங்கோடு தொகுதி தனக்கு சாதகமாக இல்லாததாக விஜயதரணி கருதுகிறார். இதன் காரணமாக தேசிய பொறுப்போ, ஆணைய அல்லது வாரிய பொறுப்பையோ விஜயதரணி எதிர்பார்ப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.