எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் த.வெ.க.விற்கு செல்வாரா.? குழப்பத்தில் தவெக.!
செங்கோட்டையன்
சென்னை: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனின் நடவடிக்கைகள், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தி.மு.க. தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். நாளை தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில், இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் செங்கோட்டையன். கட்சி மாறினால் கட்சி தாவல் தடை சட்டம் மூலம் அவரின் பதவி பிரிக்கப்படும் என்பதால் அதற்கு முன்பாக ராஜினாமா செய்துள்ளார். மாஜி அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமன்றி பல முக்கிய தலைவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம். இதற்காக விஜயுடன் அவர்கள் தீவிரமாக பேசி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை இந்த இணைப்பு நிகழ்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேகர்பாபுவுடன் நேரடியாகப் பேசிய செங்கோட்டையன்
இதற்கு இடையே சபாநாயகர் அலுவலகத்தில் இன்று, செங்கோட்டையன் தி.மு.க. அமைச்சர் சேகர்பாபுவுடன் நேரடியாகப் பேசியதுடன், மேலும் சில தி.மு.க. மூத்த உறுப்பினர்களுடன் தொலைபேசியிலும் உரையாடியுள்ளார்.
இந்த விவகாரங்களை அறிந்த வட்டாரங்கள், செங்கோட்டையன் தனது அரசியல் நகர்வுகளை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும், தமிழக வெற்றிக் கழக தலைவர்களுக்கு உறுதியான வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றன. மாறாக, அவர் தி.மு.க.வில் இணையும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கோபம்
இது தமிழக வெற்றிக் கழக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், செங்கோட்டையன் கட்சிக்குள் முறையாக இணைவதற்கு முன்பு, அவரிடம் இருந்து தெளிவான நிலைப்பாட்டையும், விசுவாசத்தையும் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்த்தது. ஆனால் இன்று ஊடகங்களிடம் அவர் தெளிவான பதிலை கூறவில்லை. தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைகிறீர்களா என்று கேட்டதற்கு.. பதில் சொல்லவில்லை. 1 நாள் பொறுத்திருங்கள் என்று மட்டும் கூறினார்.
செங்கோட்டையனின் இந்த இரட்டை நிலைப்பாடு, தமிழக வெற்றிக் கழகம் அரசியல் தன்னை வலுவாக நிலைநிறுத்த முயலும் இச்சமயத்தில், குழப்பமான சமிக்கைகளை அனுப்புவதாக விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. செங்கோட்டையன், திமுக தலைவர்களுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையை சிதைப்பதாகவும், அவரது உண்மையான நோக்கங்கள் குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.
தமிழக வெற்றிக் கழக விஜய் அப்செட்
விஜய் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை அரசியல் நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது. செங்கோட்டையன் இறுதியாக எந்த கட்சியைத் தேர்ந்தெடுப்பார் என்பதைப் பலரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அவரது அடுத்தகட்ட நகர்வு, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி உத்திகள் மற்றும் உள் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
