ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவியை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை சுட்டு பிடித்த போலீசார். !
கோவை
கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவியை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பம் நடந்த அன்று, மாணவி மயக்கம் தெளிந்து நள்ளிரவில் வீடு வீடாக சென்று கதவைத் தட்டி உதவி கேட்டு கதறியது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையை சேர்ந்த 21 வயது பெண், கோவையில் தனியார் விடுதியில் தங்கி இருந்து கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்த கல்லூரி மாணவியும் கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனம் நடத்தி வந்த ஒரு இளைஞரும் இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமாகி உள்ளனர். இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியது.
சம்பவம் நடந்த அன்று, இரவு நேரத்தில், கல்லூரி மாணவி, காதலனுடன் காரில் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பேசி கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அங்கே மதுபோதையில் வந்த 3 வாலிபர்கள், காரின் கதவை திறக்க சொல்லி மிரட்டியுள்ளனர். இதனால், பயந்து கதவை திறந்தபோது, அவர்கள் காதலனின் நெற்றியில் வெட்டியிருக்கிறார்கள். இதனால், காதலன் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதைத்தொடர்ந்து, கொடூர நபர்கள், கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக இருளான பகுதிக்கு கடத்திச் சென்றனர். அவர்கள் காரில் இருந்து மாணவியை இழுத்துச் செல்வதற்கு முன், காதலன் போலீஸுக்கு தகவல் கொடுத்து விடுவார் என்று கருதி, அவருடிஅய செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
மாணவியை இருளடர்ந்த பகுதிக்கு கடத்திச் சென்ற அந்த கொடூரர்கள், அங்கிருந்த 6 அடி உயர தடுப்பு சுவரை தாண்டி மாணவியை மறுபுறம் தூக்கி சென்றுள்ளனர். பின்னர், அந்த 3 பேரும் மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பினர். கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி மயங்கி கிடந்தார்.
இதற்கிடையில், அரிவாள் வெட்டில் காயம் அடைந்த காதலன் மயக்கம் தெளிந்து, அங்கிருந்து நடந்தே மெயின்ரோட்டுக்கு சென்றுள்ளார். அங்கே, சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் போனை வாங்கி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் இரவு 11.20 மணிக்கு சம்பவ பகுதிக்கு சென்று காதலனிடம் தகவல்களை பெற்று தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். கோவை விமான நிலையம் பின்புறம், காட்டுப் பகுதியில் முட்புதர்களாகவும், இருள்சூழ்ந்தும் இருந்த பகுதிகளில், தலா 3 காவலர்கள் என டார்ச்லைட் வெளிச்சத்தில் தேடியுள்ளனர்.
இந்த நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மயங்கிக் கிடந்த மாணவி, மயக்கம் தெளிந்து எழுந்து சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் முன் கதவை தட்டியுள்ளார்.
ஆனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்கவில்லை. இதனால் அவர்கள் கதவு திறக்க வில்லை. அந்த வீட்டின் அழைப்பு மணி வேலை செய்யாததால், உதவி கேட்படற்காக அவசரமாக மோட்டார் பம்பின் சுவிட்சை மாற்றி அழுத்தியுள்ளார். ஆனாலும், யாரும் வெளியே வரவில்லை என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, மாணவி ஒரு வீட்டின் திறந்த படிக்கட்டில் ஏறி, மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கே முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார். அங்கும் உதவி கிடைக்கவில்லை.
நள்ளிரவில் உதவி கேட்டு மாணவி வீடு வீடாக கதவைத் தட்டி உதவி கேட்டும் யாரும், கதவு திறக்கப்படாத நிலையில், மற்றொரு வீட்டின் தரைத்தளத்துக்கு சென்ற மாணவி கதவைத் தட்டியுள்ளார். கதவை திறந்தவர்கள் மாணவியின் நிலையை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
அந்த வீட்டில் இருந்தவர்கள், உடனடியாக மற்ற வீட்டினரையும் உதவிக்கு அழைத்துள்ளனர். மாணவி அவர்களிடம் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதிருக்கிறார். அவர்களிடம் மாணவி தனது தாயிடம் பேச வேண்டும் என்றும், போனை கொடுக்குமாறும் கேட்டுள்ளார். அங்கிருந்தவர்கள், தங்களது போனை மாணவிக்கு பேச கொடுத்தனர்.
அந்த நேரத்தில், கல்லூரி மாணவி அணிந்து இருந்த உடைக்கு மாற்றாக ஒரு பெண் துணியை கொடுத்து அணிய செய்தார். மேலும், அந்த பகுதி குடியிருப்பு வாசிகள், கொடுத்த தகவலின்பேரில் அங்கே விரைந்து வந்த போலீசார், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார், அந்த கொடூரர்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது.
போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த கொடூரர்கள் காதலனிடம் பறித்துச்சென்ற செல்போன் முக்கிய துருப்பு சீட்டாக அமைந்தது. அந்த போனை இந்த கொடூரர்கள் ஒரு கடைக்கு சென்று விற்பதற்காக கொடுத்துள்ளனர். அந்த கடைக்காரர் அவர்களைப் பார்த்து சந்தேகம் அடைந்து அந்த நபர்கள் குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.
போலீஸாரின் விரைவான விசாரணையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), கார்த்தி என்ற காளீஸ்வரன் (20) ஆகிய அண்ணன், தம்பியும், குணா என்ற தவசி (20) என்றும் தெரியவந்தது. செல்போன் சிக்னல் காட்டியதை வைத்து, இவர்கள் 3 பேரும் சத்தியமங்கலத்துக்கு சென்று அங்கிருந்து துடியலூர் வெள்ளக்கிணறு பகுதிக்கு வந்து பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் போலீசார் பிடிக்க முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் அந்த 3 பேரையும் துப்பாக்கியால் கால் பகுதியில் சுட்டுப் பிடித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காதலன், தன்னால் பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்து கொள்வதாக போலீஸ் அதிகாரிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
