செங்கல்பட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான பேருந்து நிலையம். !
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பேருந்து நிலையம் இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு உறுதி அளித்துள்ளார்.
இந்தப் பேருந்து நிலையம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 60 பேருந்துகள் மற்றும் 57 வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம், ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக இலவச குடிநீர், உணவு கூடங்கள், மருத்துவ அறை மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் மகாபலிபுரம் ஆகிய இடங்களில் அமையவுள்ள பேருந்து நிலையங்களில் தினசரி பயணிகளுக்கு பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கும் உணவகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
செங்கல்பட்டில் அமையவுள்ள சாட்டிலைட் டவுன்
சென்னைக்கு அருகே இருந்தும், சென்னையின் நுழைவு வாயில் இருந்தும் கூட செங்கல்பட்டு இதுவரை கவனிக்கப்படாமல் இருந்தது. மோசமான சாலைகள், போதுமான திடக்கழிவு மேலாண்மை இல்லாதது, நிலத்தடி வடிகால் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு இப்போது ஒரு மாற்றத்திற்கு தயாராக உள்ளது. சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (CMDA) நகரத்தை ஒரு நிலையான, ஸ்மார்ட் மற்றும் உள்ளடக்கிய நகர்ப்புற மையமாக மாற்றம் செய்வதற்கான திட்டங்களை கையில் எடுத்துள்ளது.
அகலமான தெருக்கள், நடைபாதை கொண்ட தெருக்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூங்காக்கள், திட்டமிடப்பட்ட குடியிருப்பு பகுதிகள், வணிக இடங்கள் மற்றும் பொதுப் பகுதிகள் அனைத்தும் இங்கே அமைக்கப்பட உள்ளன. சென்னையுடன் தடையின்றி இணைக்கப்படும் வகையில் செங்கல்பட்டில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இதனை செயல்படுத்துவதற்காக, செங்கல்பட்டு புதிய நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான டெண்டர்களை CMDA வெளியிட்டு உள்ளது. 2025 முதல் 2045 வரை நகரத்தை எப்படி எல்லாம் முன்னேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு இந்த மாற்றங்களை செய்ய உள்ளனர்.
சென்னையைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல், உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே இதன் இலக்காகும். இந்த திட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் மற்றும் திருப்போரூர் தாலுகாக்களைச் சேர்ந்த 60 கிராமங்கள் அடங்கும். இவை சென்னையின் நியூ டவுன் போல செயல்படும்.
அதேபோல் சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக (செயற்கைக்கோள் நகரம்) மகாபலிபுரம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பாக இங்கே உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிப்புலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை, பஞ்சானந்தூர், அமஞ்சான்பட்டி, கொக்கிலிமேடு, மகாபலிபுரம், பூஞ்சேரி, காடம்பாடி, மற்றும் பெருமளேரி-வடகடம்பாடி-நல்லான்பிள்ளைப்பெற்றல் ஆகிய 25 கிராமங்கள் உயர்த்தப்பட உள்ளன.
இந்த கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட்டு சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட உள்ளது. இங்கே இருக்கும் பழமையான புராதன சின்னங்களை பாதிக்காமல், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சர்வதேச தரத்திற்கு மகாபலிபுரத்தை உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 25 கிராமங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நிலையில் மகாபலிபுரம் சென்னையின் புதிய துணை நகரமாக மாறும். மேலும் இங்கே முதலீடுகள் குவியும், போக்குவரத்தும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மாமல்லபுரத்தில் துணை கோள் நகரம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளது. நிறைய கடல் வளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ளது. இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயிலுடன் இணைக்கப்படும். மெட்ரோவும் கூட இங்கே எதிர்காலத்தில் வர உள்ளது.
மெட்ரோ பணிகள் இந்த 20 ஆண்டுகளில் இங்கும் முடிக்கப்படும். தற்போது இங்கே நியூ டவுன் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு இதன் மூலம் உயர்த்தப்படும். அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர் கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும்.