பத்திரிகையாளர் சந்திப்பில் இஸ்ரேல் பிரச்சினை குறித்து கேட்டதும் கோபமடைந்து கெட்ட வார்த்தைகளை பேசிய அதிபர் டிரம்ப். !
இஸ்ரேல் - ஈரான்

வாஷிங்டன்: இஸ்ரேல் ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், டிரம்பின் அறிவிப்பை மீறி ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை வீசியது.
இது அதிபர் டிரம்பை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இஸ்ரேலைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், ஒரு கட்டத்தில் அவர் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தியும் திட்டும் அளவுக்குக் கோபமடைந்தார்.
இஸ்ரேல் ஈரான் மோதலில் அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளே வந்தது. ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் பாமை வீசியது. அதைத் தொடர்ந்து பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியது. இதனால் போர் பதற்றம் மேலும் அதிகரித்தது.
டிரம்ப்
இந்தச் சூழலில் தான் டிரம்ப் இன்று காலை முக்கியமான அறிவிப்பைத் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதாவது இஸ்ரேல் ஈரான் இடையேயான 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார். இரு நாடுகளும் இனி தாக்குதலை நடத்தாது என்றும் அவர் கூறினார். ஈரான் முதலில் போர் நிறுத்தம் என்பதை அறிவிக்கவில்லை என்றாலும் கூட சற்று நேரத்திலேயே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன் மூலம் மோதல் முழுமையாக முடிந்ததாகவே பலரும் நினைத்தனர். ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சற்று நேரத்திலேயே இஸ்ரேல் ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்தின. இரு நாடுகளுமே போர் நிறுத்தம் குறித்து மாறி மாறி குற்றஞ்சாட்டியது. இது அமெரிக்காவைக் கடுமையாகக் கோபப்படுத்தியதாகவே தெரிகிறது.
ஆவேசமான டிரம்ப்
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நேட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இஸ்ரேலை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஒரு கட்டத்தில் அவர் கெட்ட வார்த்தையைச் சொல்லியும் கூட ஆவேசமாகத் திட்டினார்.
கெட்ட வார்த்தை பேசிய டிரம்ப்
நேட்டோ மாநாட்டிற்குக் கிளம்பும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரான் போர் நிறுத்தத்தை மீறியது ஓகே. ஆனால் இஸ்ரேலும் தான் போர் நிறுத்தத்தை மீறியது. எனது முயற்சியில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டவுடனே இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது. இஸ்ரேல் நடவடிக்கை எனக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஈரானுக்கு நான் 12 மணி நேரம் டைம் கொடுத்திருந்தேன்.. ஆனால், எடுத்தவுடன் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. அதேபோல் ஈரான் மீதும் நான் மகிழ்ச்சியாக இல்லை.
கடும் கோபம்
இஸ்ரேல் இன்று காலை தேவையில்லாமல் ஒரு ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. அது தவறுதலாக நடந்திருக்கலாம். ஆனால் அது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் நீண்ட காலமாகச் சண்டையிட்டு வருகின்றன. அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று சொல்லிக் கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தினார்.
இந்த பிரஸ் மீட்டில் பார்க்கும்போதே டிரம்ப் கடும் கோபத்தில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. தனது அறிவுறுத்தலையும் மீறி இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது டிரம்பிற்கு கடும் கோபத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே டிரம்ப் சர்வதேச ஊடகங்கள் இருந்த போதிலும், டிரம்ப் கெட்ட வார்த்தையைப் பேசினார்.