சமஸ்கிருதத்திற்கு ரூ.2,532 கோடி ஒதுக்கீடா? கோபமடைந்த மொழி ஆர்வலர்கள். !
சமஸ்கிரதம்

மத்திய பாஜக அரசு மீது திமுக உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டில் இந்தி திணிப்பு மட்டுமின்றி சமஸ்கிருத மொழியையும் திணிப்பதாகவும் உள்ள குற்றச்சாட்டு பிரதானமாக உள்ளது.
சமஸ்கிருதத்திற்கு ரூ.2,532 கோடி:
இந்த நிலையில், ஆர்டிஐ மூலமாக மத்திய பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கடந்த 11 ஆண்டுகளில் ஒவ்வொரு மொழிக்கும் எத்தனை கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலில் மத்திய அரசு நாட்டிலே அதிகபட்சமாக சமஸ்கிருதம் மாெழிக்கு ரூபாய் 2 ஆயிரத்து 532 கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக உருது மொழிக்கு ரூபாய் 837.94 கோடியும், இந்தி மொழிக்கு ரூபாய் 426.99 கோடியும், தமிழ் மொழிக்கு ரூபாய் 113.48 கோடியும் நிதி ஒதுக்கியுள்ளனர்.
வெறும் 25 ஆயிரம்:
மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கிய சமஸ்கிருதம் மொழி தவிர, உருது, இந்தி, தமிழ் உள்பட மற்ற அனைத்து மொழிகளையும், கோடிக்கணக்கான மக்கள் தற்போது வரை பேசி வருகின்றனர். ஆனால், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை வெறும் 24 ஆயிரத்து 821 பேர் மட்டுமே ஆகும்.
இது தற்போது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழிகளுக்கே நூற்றுக்கணக்கான கோடிகளை மட்டும் ஒதுக்கீடு செய்துவிட்டு, ஆயிரக்கணக்கில் மக்கள் பேசும் மொழிக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் நிதியை ஒதுக்கியிருப்பது மொழி ஆர்வலர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மொழிகளுக்கு பாரபட்சம்:
ஏனென்றால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தி மொழி திணிப்புக்குத்தான் எதிர்ப்பு வலுவாக இருக்கிறதே தவிர, இந்தி மொழிக்கு எதிர்ப்பு இல்லை. இதன் காரணமாக, இந்தியாவிலே அதிகம் இந்தி கற்றுக்கொள்ளும் மாணவர்கள், இளைஞர்கள் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையானதாக உள்ளது.
உலகில் மூத்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழிக்கு வெறும் வெறும் ரூபாய் 113.48 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர். தமிழுக்கு நிகரான மக்கள் பேசும் மொழியான தெலுங்கிற்கு ரூபாய் 12.65 கோடி மட்டுமே மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் ஒதுக்கியுள்ளது. இந்த மொழிகள் எல்லாம் மக்கள் அதிகமாக பேசும் புழக்கத்தில் உள்ள மொழி ஆகும்.
பா.ஜ.க.விற்கு குவியும் விமர்சனங்கள்:
ஆனால், சமஸ்கிருதம் மொழியை பேசும் மக்களின் எண்ணிக்கை வெறும் 25 ஆயிரம் மட்டுமே ஆகும். அந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மேலும் ஆயிரத்தில் மட்டுமே உயர்ந்திருக்கும். இதுதவிர சமஸ்கிருத மொழியை கற்பதால் என்ன பயன்? என்பதே பலரது முதன்மை கேள்வியாக உள்ளது. சமஸ்கிருத மொழி பேசுவதால் என்ன வேலைவாய்ப்பு? இருக்கிறது என்பதே பிரதான கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. அரசிற்கு கடும் விமர்சனங்களும் குவிந்து வருகிறது.
நடைமுறையில் சமஸ்கிருதம் என்பது கோயில்களில் பூஜைக்காக அர்ச்சகர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர் ஆவதற்கு மிகப்பெரிய சவால் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள நிலையில், சமஸ்கிருதம் படிப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? என்பதே பெருவாரியான கேள்வியாக உள்ளது.
மொழி பாரபட்சம்?
மேலும், கேந்திரியா வித்யாலாயா, சிபிஎஸ்இ உள்ளிட்ட பல பள்ளிகளிலும் அந்தந்த மாநில மொழிகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் சமஸ்கிருத மொழி தவறாமல் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் மொழி ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் மொழிக்கும், பழமையான மொழிகளுக்குமே அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மொழி ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்தியுள்ளனர்.