கள்ளக் காதலுக்காக கணவனை கார் ஏற்றிக் கொன்ற மனைவி.!

தென்காசி

கள்ளக் காதலுக்காக கணவனை கார் ஏற்றிக் கொன்ற மனைவி.!

தென்காசி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

தென்காசி, மே  - 22

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி அவரது கள்ளக் காதலன் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல பட்டமுடையார்புரம் கிராமம் வேதக் கோவில் தெருவை சேர்ந்த மகிழம்பூ என்பவரது மகன் வேல்துரை (வயது 43) இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவி பேச்சியம்மாள் என்ற உமா இவர்கள் தற்போது பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கல பட்டிணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 

வேல்துரை தினமும் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்துக்கு சென்று அங்கிருந்து பஸ்மூலம் வேலைக்கு புறப்பட்டு செல்வார்.

அப்படி நேற்று முன்தினம் அதிகாலையில் வேல்துரை பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது நெல்லை தென்காசி நான்கு வழிச் சாலையில் சிவகாமிபுரம் விலக்கு அருகில் சென்றபோது அந்த வழியாக சென்ற கார் திடீரென்று பைக்  மீது மோதி வட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட கண்டக்டர் வேல்துரை  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாவூர் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வேல்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து தொடர்பாக பாவூர் சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது இந்த விபத்து திட்டமிட்டு நடைபெற்று இருக்கலாம் என்று  போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

உடனடியாக விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை கண்டு பிடித்து காரின் டிரைவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் பூலாங்குளம் பகுதியைச் சார்ந்த வைத்திலிங்கம் என்பவரது மகன் ஆறுமுகம் (வயது 36) என்பது தெரிய வந்தது. அவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மேலும் விசாரணை செய்த போது

விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரின் உரிமையாளர் பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி நாடார் என்பவரது மகன் முத்து சேர்மன் என்ற சுதாகர் (வயது 41) என்பதும் அவர் தூண்டுதலின் பேரிலேயே வேல்துரையின் பைக் மீது காரைக் கொண்டு மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றதாகவும், இந்த சம்பவம் நடைபெற்ற போது முத்து சேர்மன் என்ற சுதாகரும் அந்தக் காரில் இருந்ததாகவும் காரின் டிரைவர் ஆறுமுகம் கூறியுள்ளார்.

உடனடியாக பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் மற்றும் போலீசார் முத்து சேர்மன் என்ற சுதாகரை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் முத்து சேர்மனுக்கு சொந்தமான அடைக்கலப்பட்டணம் வீட்டில் அரசு பஸ் கண்டக்டர் வேல்துரை குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் வேல்துரையின் மனைவி பேச்சியம்மாள் என்ற உமா (வயது 36) விற்கும் வீட்டின் உரிமையாளர் முத்து சேர்மன் என்ற சுதாகருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. 

இதை அறிந்த அரசு பஸ் கண்டக்டர் வேல்துரை  பலமுறை கண்டித்து உள்ளார் ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கண்டக்டர் வேல்துரையை தீர்த்துக்கட்ட அவரது மனைவி பேச்சியம்மாள் என்ற உமாவும், உமாவின் கள்ளக்காதலன் முத்து சேர்மன் என்ற சுதாகரும் திட்டம் தீட்டியுள்ளனர். 

அதன்படி நேற்று முன்தினம் பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் காரை தனது ஓட்டச் செய்து அந்தக் காரில் பாவூர்சத்திரம் பகுதிக்கு சென்று உளளனர் அப்போது சிவகாமிபுரம் பகுதியில் வழக்கம்போல் தனது பைக்கில் வேலைக்குச் சென்ற வேல்துரை மீது காரை விட்டு மோதுமாறு கூறியுள்ளார்.அதன்படி கார் டிரைவர் ஆறுமுகம் வேகமாக வேல்துரை மீது மோதி உள்ளார் இதில் தூக்கி வீசப்பட்ட வேல்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார.

அதன்பின் முத்துசேர்மன் என்ற சுதாகரும், ஆறுமுகமும் காரில் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்று விட்டதாக தெரிவித்தனர்.எனவே இந்த சம்பவம் திட்டமிட்டு கண்டக்டர் வேல் துரையின் மனைவி பேச்சியம்மாள் என்ற உமா, அவரது கள்ளக்காதலன் முத்துச்செல்வன் என்ற சுதாகர் ஆகிய இருவரும் திட்டமிட்டு கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இது பற்றி வழக்கு பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்தில் சிக்கி பலியான அரசு பஸ் கண்டக்டர் வேல்துரையின் மனைவி பேச்சியம்மாள் என்ற உமா,  அவரது கள்ளக்காதலன் முத்து சேர்மன் என்ற சுதாகர், காரை ஓட்டி வந்த ஆறுமுகம் ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்ததோடு விபத்தை ஏற்படுத்திய காரையும் பாவூர்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்