நாக்பூரில் முதலமைச்சர் பட்னாவிஸுடன் சிவசேனா உத்தவ் தாக்கரே சந்திப்பு.!
அரசியல்

மகாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பாக பாஜகவை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே திடீரென சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மீது டெல்லி மேலிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இந்த தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான இந்த மகா விகாஸ் அகாடியை விட்டு வெளியேறுவதில் உத்தவ் தாக்கரே சிவ சேனா முனைப்புடன் இருக்கிறது.
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் வரும் நிலையில் உத்தவ் தாக்கரே சிவசேனா தனித்தே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டும் வருகிறது.
அதேபோல இந்தியா கூட்டணிக்கான தலைமையை காங்கிரஸிடம் இருந்து மாற்ற வேண்டும் என்பதையும் உத்தவ் தாக்கரே சிவசேனா வலியுறுத்தி வருகிறது.
உத்தவ் தாக்கரே சிவசேனா எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி, மகா விகாஸ் அகாடியைவிட்டு வெளியேறிவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த அரசியல் பின்னணியில் நாக்பூரில் நேற்று திடீரென முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். சிவசேனா என்ற கட்சியையே சிதைத்து சின்னாபின்னமாக்கி ஆட்சியையே கவிழ்த்த பட்னாவிஸை உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசிய நிகழ்வு பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே கூறுகிறார்.
ஆனால் பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.