ஜெயலலிதா, ரஜினி காந்த் கன்னடர்கள் தானே? தக்லைப் பிரச்சினையில் உச்சநீதி மன்றம் காட்டம்.!

தக்லைப்

ஜெயலலிதா, ரஜினி காந்த் கன்னடர்கள் தானே?  தக்லைப் பிரச்சினையில் உச்சநீதி மன்றம் காட்டம்.!

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், படத்தை திரையிடுவதை தடுப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது கூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக் கூறி நாச வேலை நடப்பதாகவும், நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோர் கன்னடர்கள் தான் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அனைவரும் ஒன்றுதான் எனக் கூறியது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. குறிப்பாக நடிகர் கமல்ஹாசனும் சிம்புவும் முதன்முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சிம்பு ஏற்கனவே மணிரத்தினத்தின் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கமல், சிம்பு மட்டுமல்லாது, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். ஏஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்ற கமல்ஹாசனின் பேச்சு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னட மொழியை கமல்ஹாசன் அவமதித்து விட்டதாக கூறி அங்குள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இது தொடர்பான வழக்கில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக நீதிமன்றம் வற்புறுத்திய நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் உறுதியாக இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ரசிகர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ் அமைப்புகளும் ஆதரவாக திரண்டன. இந்த நிலையில் கர்நாடகா தவிர்த்து கடந்த ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. இந்த நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தக் லைஃப் திரைப்படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அரசு உறுதியளித்தது. அப்போது குறுக்கிட்ட கர்நாடகா வர்த்தக சபை கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அப்போது மட்டுமே படத்தை வெளியிட முடியும் என கூறியது. மேலும் பப்ளிசிட்டிக்காக கமல்ஹாசன் இது போல் பேசியதாக கூறப்பட்டது.

இதனால் கோபமடைந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏதாவது அவதூறு கருத்து தெரிவித்திருந்தாலோ அல்லது அறிக்கை வெளியிட்டாலோ வழக்கு தொடரலாம் அல்லது பதில் அறிக்கை விடலாம். அதற்காக படத்தை வெளியிட தடையாக இருக்கக் கூடாது. சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என கர்நாடக வர்த்தக சபைக்கு கண்டனம் தெரிவித்தது.

மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரஜினிகாந்த் ஆகியோர் கன்னடர்கள் தான் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அனைவரும் ஒன்றுதான் எனக் கூறியது. அதுமட்டுமல்லாமல் ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது சொன்னால் கூட உணர்வுகளை புண்படுத்தி விட்டார் என இங்கு நாச வேலைகள் நடக்குது. நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நாளை இதே ஒரு நாடகத்திற்கு எதிராகவோ கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுவார்கள். இதையெல்லாம் அனுமதிக்க முடியாது.

கர்நாடக அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அடக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். படம் எடுக்க யாராவது தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என கூறியதோடு, தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.