ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவரா? எங்க அதிகாரத்தை காட்டட்டுமா? சென்னை ஐகோர்ட் காட்டம் .!
உயர் நீதி மன்றம்

சென்னை : ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என நினைக்கிறாரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா?" என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராம் காட்டமாக கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலமான ராயபுரம் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் கவுன்சிலரும் வழக்கறிஞருமான ருக்மாங்கதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5வது மண்டலத்தில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2021-ல் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி செயல்படுத்தவில்லை என வழக்கறிஞர் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நேற்று (ஜூலை 8) விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஶ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை குமரகுருபரன் ஐஏஎஸ் தமது ஊதியத்தில் இருந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர், அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க கோரி கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தரன், தலைமை நீதிபதி ஶ்ரீராம் அமர்வில் இன்று (ஜூலை 9ஆம் தேதி) முறையிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஶ்ரீராம், வழக்கறிஞர்கள் தவறான பிரமாணப் பத்திரத்தைக் கொடுத்திருந்தாலும் கூட, சென்னை மாநகராட்சி ஆணையர் படித்துப் பார்த்துதான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் மாநகராட்சியின் ஆணையராக இருக்கவே அவர் தகுதி இல்லாதவர். ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என நினைக்கிறாரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா? என்றும் காட்டமாக கூறினார்.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று ஏன் ஆஜராகவில்லை? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ஶ்ரீராம், உரிய பிரமாணப் பத்திரத்துடன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நாளை ஜூலை 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளை ஜூலை 10-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் அபராதம் குறித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தலைமை நீதிபதி ஶ்ரீராம் தெரிவித்தார்.