இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.! ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆலோசனை.!
கிரிக்கெட்

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக IPL 2025 போட்டிகளை தற்காலிகமாக நிறுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஞ்சிய போட்டிகளை தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. அதேநேரத்தில் அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா? என்ற ஆலோசனையும் தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. ஐபிஎல் 2025 தொடர் பாதியில் ரத்து செய்யப்படுவதால் அதனால் ஏற்படும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஈடுசெய்வது எப்படி?, 10 அணிகளின் உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், ஒளிபரப்பு உரிமை இழப்பு, விளம்பர வருவாய் இழப்பு உள்ளிட்டவைகளை சமாளிப்பது எப்படி என்பது குறித்தும் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் கலந்தாலோசனை நடத்தி வருகிறது.
இதில் எட்டப்படும் சுமூக முடிவைப் பொறுத்து ஐபிஎல் போட்டிகள் ரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து இப்போது தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே நடத்தலாமா? அல்லது வெளிநாடுகளில் ஏதேனும் ஒன்றில் எஞ்சிய போட்டிகளை நடத்தலாமா? என யோசிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம், அதனால் ஏற்பட இருக்கும் நடைமுறை சிக்கல், செலவீனம் மற்றும் வருவாய் இழப்பு குறித்தும் தீர்க்கமாக யோசித்துக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானுடன் நீடிக்கும் போர் பதற்றம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, எப்படி இருந்தாலும் இப்போது எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாது என்ற முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் வந்துவிட்டது. ஆனால், இந்த பதற்றம் குறைந்த உடனே ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் ஐபிஎல் இந்தியாவில் நடத்த முடியுமா? என்பது குறித்தும் ஐபிஎல் நிர்வாகிகள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் குறித்து அனைத்து தரப்பினரிடம் தெரியப்படுத்தியிருக்கும் பிசிசிஐ அவர்களிடம் பேச்சுவார்த்தையிலும் அவசர கதியில் நடத்திக் கொண்டிருக்கிறது.
இன்று மாலைக்குள் முக்கிய முடிவுகள் அனைத்தும் எடுக்கப்பட்டு ஐபிஎல் 2025 ரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளது. அதனால் ஐபிஎல் போட்டிகள் இப்போது நடப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலையும், ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மத்திய அரசுக்கு தேவையில்லாத சிக்கலை உருவாக்கும் என்பதால் இதுகுறித்து மத்திய அரசு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரியப்படுத்திவிட்டது. எனவே, ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு சோகமான செய்தியே வர இருக்கிறது.